http://www.islamkalvi.com
கி.பி. 586 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள், பெண்கள் மனித இனத்தை சார்ந்தவர்களா? இல்லையா என? விவாதம் நடாத்திக்கொண்டிருந்தனர். கி.பி.1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்ககூடாது என சட்டம் இயற்றியது. கி .பி.1805 ஆம் ஆண்டுவரை ஒரு கணவன் தன் மனைவியை விற்பது கூடும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை பெண்களுக்கு பிரஜா உரிமை கிடையாது.
எனினும், இஸ்லாம் வழங்கியுள்ள அளப்பரிய உரிமைகளை அறிந்த நிலையிலும் இன்று சில கிறிஸ்த்தவ மிசனரிகள் இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வு காரணமாக பல்வேறு அபாண்டங்களை சுமத்துகின்றன.
இஸ்லாம் பெண்ணுக்கு இன்னென்ன உரிமைகளை வழங்கி இருக்கின்றது என்று நாம் கூறும் போது, அவையொன்றும் பெரிய விடயமல்ல. நாங்கள் இறைவேதமாக நம்புகின்ற பைபிளும் பெண்களுக்கு இன்னென்ன உரிமைகளை வழங்கியுள்ளன என்று எதிர்விவாதம் செய்தால் அது அறிவுபூர்வமாக இருக்கும். அதனை விடுத்து அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைப்பது அறிவுடமையாகாது.
இத்தொடரில் பைபிள் பெண்களை போற்றுகின்றதா? அல்லது தூற்றுகின்றதா? என்று பைபிள் ஆதார அடிப்படையில் நோக்குவோம்.
மறுக்கப்படும் கல்வி உரிமை
“சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது”. -அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.”- 1 கொரிந்தியர் 14:34,35
சபைகளில் பேசுவதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் எந்த ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் தத்தம் வீட்டில் தம் புருஷனிடத்தில் மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெண்களின் அறிவுத் தேடலுக்கு பைபிள் தடைபோடுகின்றது.
பைபிளின் இந்த போதனை கிறிஸ்த்தவர்களை அதிகமாக கொண்ட ஐரோப்பிய நாடுகளிலாவது பின்பற்றப்படுகின்றதா? என்றால் இல்லை. சபைகளில் பேசக் கூடாது என்கின்ற பைபிளின் போதனையை நடைமுறைச் சாத்தியமற்றது, காலத்திற்குதவாதது, கல்விக்கு தடை போடக்கூடியது என்று கிறிஸ்த்தவ பெண்களே உதறித்தள்ளிவிட்டார்கள்.
இந்நிலையில் கல்வியைத் தேடிக் கற்பதை ஆண், பெண் இருபாலார் மீதும் கடமையாக்கியிருக்கும் மார்க்கத்தின் மீது, நபிகளார் (ஸல்) அவர்களது சபைகளில் முழுமையாக கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டு பெண்களது அறிவுத் தேடலுக்கு வழிவகுத்த மார்க்கத்தின் மீது அவதூறாக குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்? கிறிஸ்த்தவ அன்பர்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்
உபதேசத்திற்கு தடை
“உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்.” -1 திமேத்தியு- 2:11,12
பெண்கள் உபதேசம் பண்ணுவதை மேலுள்ள பைபிள் வசனம் முற்றாக தடைசெய்கின்றது. எனவே, கிறிஸ்த்தவ பெண்கள் உபதேசிக்க முடியாது என்றால், கன்னியாஸ்ரிகள் மாத்திரம் உபதேசிப்பது எந்த வகையில் நியாயம்?
கசப்பு நீர் பரிசோதனையும், இழிவுபடுத்தப்படும் பெண்ணினமும்
12. நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர் முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம் பண்ணி,
13. ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும் அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும்,
14. எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள் மேல் குரோதங் கொண்டிருந்தாலும்,
15. அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக.
16. ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
17. ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு,
18. ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையிலிருக்கவேண்டும்.
19. பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாப காரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய்.
20. உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால்,
21. கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும் பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங்குறியுமாக வைப்பாராக.
22. சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென் என்று சொல்லக்கடவள்.
23. பின்பு ஆசாரியன் இந்தச் சாப வார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு,
24. சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும்.
25. பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக்கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி,
26. ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன்.
27. அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம் பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறு வீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள்.
28. அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத் தக்கவளாயிருப்பாள்.
29. ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும்,
30. புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின் மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின் படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.
31.புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்- உபாகமம் 22:12-31
மனைவியின் கற்பு மீது சந்தேகம் கொண்ட ஆண் மக்கள் மன்றத்தில் கசப்பு நீர் பரிசோதனை நடாத்துவது போன்று, கணவனுடைய நடத்தையின் மீது சந்தேகம் கொண்ட பெண்ணுக்கும் ஒரு சிவப்பு நீர் பரிசோதனையாவது பைபிள் குறிப்பிட்டிருந்தால் நடைமுறைச் சாத்தியமற்றதா? என்பதற்கப்பால் ஓரளவாவது நடுநிலை பேணியிருக்கின்றது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
கிறிஸ்த்தவ அறிஞர்கள் பல வருடங்களாக நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கின்ற வழக்குகளுக்கும், பைபிளை இறைவேதமாக நம்புகின்ற வைத்தியர்கள் மரபணு பரிசோதனையை விடுத்து, கசப்பு நீர் பரிசோதனையை பரிந்துரை செய்யலாம் அல்லவா?
ஆனால், நாம் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு பைபிளை ஆய்வுக்குட்படுத்தி பார்த்தால் பைபிள் முழுக்க பெண்களுக்கு எதிராக, நடைமுறைச் சாத்தியமற்ற போதனைகள் நிறைந்து காணப்படுவதை அவதானிக்கலாம்.
பிரசவத் தீட்டு
பைபிளில் நடைமுறைச் சாத்தியமற்ற, அறிவுக்குப் பொருந்தாத பல்வேறு போதனைகள் நிறைந்து காணப்படுவது போன்று ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பது தொடர்பிலும், அதனால் ஏற்படக் கூடிய இயற்கையான உபாதைகள் தொடர்பிலும் பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“பின்னும் கர்த்தர் மோசேயினிடம், நீ இஸ்ரவேலோடு பேசி ஒரு ஸ்திரீ பிரசவித்து ஆண்பிள்ளைகளைப் பெற்றால் அவள், சூதகஸ்திரீ விலக்கமாய் இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாய் இருப்பாள். எட்டாம் நாளில் அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலில் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பின்பு அவள் 33 நாள் தன் உதிரச்சுத்திகரிப்பு நிலையில் இருந்து சுத்திரகரிப்பின் நாட்கள் நிறைவேறும் அளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்தையும் தொடக் கூடாது. பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது. பெண் பிள்ளைகளைப் பெற்றாளாகில் அவள் இரண்டு வாரம் சூதகஸ்திரியைப் போல் தீட்டாயிருந்து பின்பு 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு தான் பெற்ற ஆண் பிள்ளைக்காவது பெண் பிள்ளைக்காவது ஒரு வயதான ஆட்டுக் குட்டியை தகனப் பலியாகவும், ஒரு புறாக்குஞ்சியாவது , காட்டுப் புறாவையாவது பாவ நிவாரணப்பலியாகவும் தரிசனக் கூடார வாசலில் ஆசாரியினிடம் அவள் கொண்டு வர வேண்டும். அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் படைத்து அவளுக்காக பிராயச்சித்தம் செய்வான். செய்யவே அவள் தன் உதிரம் ஊறும். தீட்டு நீங்கி சுத்தமாவாள்.”- (லேவியராகமம் 12:1-7)
பைபிளின் இந்த போதனை நியாயமானதா? என்பதற்கப்பால் பைபிளை இறைவேதமாக ஏற்றுக் கொண்ட கிறிஸ்த்தவ பெண்களால் சரி நடைமுறைப்படுதப்படுகின்றதா? என்றால் நிச்சயமாக இல்லை. தினந் தோறும் பல்லாயிரக்கணக்கானோர் குழந்தைகளை ஈன்றெடுக்கின்றனர். ஆண் குழந்தையை ஈன்றெடுத்ததால் 33 நாட்கள் (?) உதிரச்சுத்திகரிப்பு நீங்கிய பெண்களும், பெண் குழந்தையை ஈன்றெடுத்ததால் 66 நாட்கள் (?) உதிரச்சுத்திகரிப்பு நீங்கிய பெண்களுமாக தினந்தோறும் ஆகக்குறைந்தது சில ஆயிரம் பெண்களாவது வயதான ஆட்டுக்குட்டிகளையும், காட்டுப் புறாக்களையும் பலியிட கொண்டு வரவேண்டும்.
கிறிஸ்த்தவ பாதிரிகளோ தேவாலயங்களில் முழுமூச்சாக ஆடுகளையும், காட்டுப் புறாக்களையும் பலியிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பைபிளின் உயரிய (?) போதனை கிறிஸ்த்தவ பெண்களால் சரி நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும் நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
அது மாத்திரமன்றி தனது அருமைக் குழந்தையை ஈன்றெடுப்பதற்காக மரண விளிம்பு வரை சென்று வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, ‘தீட்டு” என்ற பெயரில் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பதுதானா முறை? நிச்சயமாக இவ்வாறான ஒரு மனசாட்சி அற்ற போதனையை கர்த்தர் செய்திருக்கமாட்டார் என்பதை கிறிஸ்த்தவ அன்பர்கள் புரிந்து கொள்ளட்டும்.
மறுக்கப்படும் மறுமணம்
‘நான் கர்த்தர். கன்னிகையாயிருக்க பெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும். விதவையையாகிலும் தள்ளப்பட்டவளையாகிலும் வேசியையாகிலும், கற்பழிக்கப்பட்டவளையாகிலும் அவன் விவாகம் செய்யாமல் தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையையே விவாகம் பண்ண வேண்டும்.” (லேவியராகமம் 21:13-14)
ஒரு பெண் விதவையாக்கப்டுவதில் அவளுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லாத நிலையில், கர்த்தருடைய ஏற்பாட்டின் அடிப்டையிலேயே ஒரு பெண் விதவையாக்கப்டும் போது கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிள் வேசியையும், விதவையையும் சம அந்தஸ்த்தில் வைத்து நோக்குவதை அவதானிக்கலாம்.
எனவே, இவ்வாறாக பெண்களுக்கு எதிராக அநியாயமான, பெண்களைத் தூற்றுகின்ற போதனைகள் பைபிளில் நிறைந்து காணப்படுவதை அவதானிக்கலாம். இந்நிலையில் கிறிஸ்த்தவ அன்பர்கள் பைபிளில் இவ்வாறெல்லாம் பெண்ணுரிமை (?) வழங்கப்பட்டுள்ளது என்று அறிவுபூர்வமாக அணுகுவதை விடுத்து, “வானத்தை நோக்கி உமிழ்ந்தால் தன் முகத்திலேயே விழும்” என்பதை மறந்து இஸ்லாத்தின் மீது அநியாயமான முறையில் அபாண்டங்களை அள்ளி வீச முனைகின்றனர்.
போலி பெண்ணுரிமைவாதிகளை பொறுத்தவரையில், முழு உடலையும் மறைத்து ஆடையணிந்திருக்கும் கன்னியாஸ்திரிகள் கண்ணியத்திற்குரியவர்கள்.
ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலோ ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுமே கண்ணியத்திற்குரிவர்கள்.
பெண்ணுரிமைவாதிகளைப் (?) பொறுத்த வரையில் அன்னை தெரசா அடக்கமுடையவர்கள். ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலோ ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுமே அடக்கமானவர்கள்.
இன்ஷா அல்லாஹ் பைபபிளின் போதனைகள் வெளிக்கொணரப்படும்.