மனிதர்கள் வாழ்ந்திட தகுதியற்ற நிலம், உலகின் பிற மக்களால் ஒதுக்கப்பட்ட நிலம், முறையான ஆட்சி அமைப்போ நிர்வாகமோ இராணுவப் பயிற்சியோ அதுவரையிலும் அறிந்திடாத அரபு தீபகற்ப மக்களை கால்நடைகள்போல வரைமுறையற்ற வாழ்வு வாழ்ந்த அவர்களை, கி.பி. 610 முதல் 633 வரையிலான 23 ஆண்டுகளில் புடம்போட்ட தங்கங்களாகப் புரட்டிப்போட்டது இஸ்லாம் எனும் இயற்கை வாழ்வியல் கோட்பாடு.
பெருமானாரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்ற தோழர்கள் இத்தகைய வெற்றிகளைக் குவித்தனர் என்பதில் ஒரு வலிமையான காரணம் இருந்தது. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களுடைய காலத்திற்குப் பிறகு பெருமானாரைப் பார்க்காத, அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெறாத ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கும் பெருமானாருக்கும் சாட்சி கூறிய முஸ்லிம்கள் இன்றுவரை இந்த 1433 ஆண்டுகாலத்தில் எண்ணற்ற எதிர்ப்புகளையும் சதிகளையும் முறியடித்து அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் தீனுல் இஸ்லாத்தை உலகில் நிலைநிறுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் பெருமானாரின் காலத்திற்கு மிக நெருங்கிய காலத்தில் வாழ்ந்த ஒரு வீரத்தளபதியின் வரலாற்றைப் பார்ப்போம்.
உலக வரலாற்றைப் படிப்பவர்கள் மத்திய கால வரலாற்றின் மகத்துவமிக்க காலங்களுக்குச் சொந்தமான ‘அல்-அந்தலூஸிய்யா’ எனும் இஸ்லாமிக் ஸ்பெயின் குறித்த நேர்மையான வரலாற்றுச் செய்திகளைப் படிக்காமல் நிகழ்காலத்திற்கு வர இயலாது.
ஐரோப்பாவின் நுழைவு வாயில் என்று போற்றப்படும் ஸ்பெயின் நாட்டில் ஏறக்குறைய 800 ஆண்டுகள் இஸ்லாம் எனும் இயற்கையான இறைவழி மார்க்கம் நிலைபெறுவதற்குக் காரணமாக இருந்த தாரிக் பின் ஸியாத் அவர்களின் வீரத்தியாகத்திற்கு ஈடுஇணையே கிடையாது.
பெருமானாரின் காலத்திற்குப் பிறகு எட்டாம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தில் இஸ்லாமிய ஆட்சியின் எல்லைகள் மிக வேகமாக விரிவாக்கப்பட்டு ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த வட ஆப்ரிக்காவின் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தனர். இஸ்லாத்தின் அறிமுகம் அந்த மக்களுக்கு அதுவரை கண்டிராத, கேட்டிராத உரிமைகளைத் தந்து அவர்களைச் சுதந்திரப் பறவைகளாக்கியது. கூட்டம் கூட்டமாக, குழுக்கள் குழுக்களாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி விரைந்து வந்தனர். வட ஆப்ரிக்கா முழுவதும் டமாஸ்கஸில் இருந்த இஸ்லாமிய ஆட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்ட பிராந்தியமாக மாறியது. உமய்யா பரம்பரையின் வலீது இப்னு அப்துல் மாலிக் மி கலீபாவாக இருந்தார்.
வட ஆப்ரிக்கா என்பது ஐரோப்பா கண்டத்தின் அருகில் அமைந்துள்ள பிரதேசம். அதிலும் குறிப்பாக வட ஆப்ரிக்காவில் மெரோக்கோ நாடு ஐரோப்பாவின் நுழைவு வாயில் என்றழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள நாடு.
எட்டாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் ஐரோப்பாவின் ஸ்பெயின் நிலப்பரப்பு விஸிகோத் மன்னர்கள் பரம்பரையின் கீழ் இருந்தது. விஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ் மன்னராக இருந்தான். ரோட்ரிக்ஸ் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி செய்தான். மக்கள் அடிமைப்பட்டுக்கிடந்தனர். செல்வந்தர்களும் மதகுருமார்களும் ஏழை எளிய மக்களை சுரண்டிச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். அதற்காக வரிச் சுமைகளால் மக்கள் வாடி வதங்கினர். சமூகக் கொடுமைகள் மற்றும் பெண்ணடிமைத்தனம் மலிந்திருந்தது.
ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்கள் கடும் வேதனையை அனுபவித்தனர். கிருத்துவ திருச்சபைகள் யூதர்களின் வழிபாட்டு உரிமைகளை மறுத்து அவர்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். யூதர்கள் தங்களுக்கு மத்தியில் திருமணம் செய்ய தடை விதித்தது திருச்சபை. ஸ்பெயினின் மன்னன் ரோட்ரிக்ஸின் அட்¢டூழியம் பெருகவே பல யூதர்கள் ஸ்பெயினை விட்டு வெளியேறி அருகில் உள்ள மொரோக்கோவில் இஸ்லாமிய ஆட்சியில் தஞ்சம் புகுந்தனர். ஸ்பெயினில் நடைபெறும் அட்டூழியத்தை இஸ்லாமிய கிலாபத்தின் வட ஆப்ரிக்க கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்களிடம் முறையிட்டு தங்களைக் காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்களை ஸ்பெயின் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியது. வட ஆப்ரிக்காவின் மொரோக்கோவிற்கும் ஐரோப்பாவின் ஸ்பெயினிற்கும் இடைப்பட்ட பகுதியில் சியோட்டா என்ற ஒரு சிறிய நாடு இருந்தது. சியோட்டா (பைசாந்தியப் பேரரசு) அதாவது ரோமப் பேரரசின் கீழ் இருந்தது. சியோட்டாவின் கவர்னராக கி.பி.710ல் ஜுலியன் என்பவர் இருந்தார்.
ஜுலியனின் மகள் ஃப்ளோரின்டா என்ற மாணவி சட்டக்கல்வி பயிலுவதற்காகவும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவும் ஸ்பெயின் நாட்டிலுள்ள டோலேடோ நகருக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். ஃப்ளோரின்டாவின் அழகும் இளமையும் ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் கண்களை உறுத்தியது. சட்டக் கல்வி பயிலச் சென்ற அந்த மாணவியை கடத்திச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகிறான் ரோட்ரிக்ஸ். இந்தச் செய்தி சியோட்டாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொதித்தெழுந்த ஃப்ளோரின்டாவின் தந்தை ஜுலியன் நேராகச் சென்று ரோட்ரிக்ஸிடம் நீதி கேட்கிறார். நீதி மறுக்கப்படுகிறது. அலட்சியப்படுத்தப்பட்டு ஸ்பெயினில் அவமானப்படுத்தப்படுகிறார் ஜுலியன். மனம் தளராமல் கான்ஸ்டான்டி நோபிள் சென்று ரோமப் பேரரசின் தலைமையிடத்தில் முறையிடுகிறார் சியோட்டாவின் கவர்னர் ஜுலியன்.
ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் வலிமையான அரசியல் நிலை கருதி ரோமப் பேரரசு அவன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜுலியனுக்கு நீத¤ கிடைக்கவில்லை. மாறாக தன்னைப் பற்றி ரோமப் பேரரசின் தலைமையிடம் புகார் அளித்ததால் கோபமுற்ற ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் அடக்குமுறைகள் சியோட்டாவில் அதிகரிக்கத் தொடங்கின. விரக்தியின் விழிம்பிற்குச் சென்ற சியோட்டாவின் கவர்னர் ஜுலியன் மற்றும் ஸ்பெயினில் ரோட்ரிக்ஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய நல்லவர்களும் நடுநிலையாளர்களும் நேரடியாக இஸ்லாமியப் பேரரசின் வடஆப்ரிக்க கவர்னர் மூஸா பின் நுஸைர் அவர்களிடம் ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுமாறும் தனக்கு நீதி பெற்றுத் தருமாறும் கோரிக்கை வைத்தனர். வீரத் தளபதி தாரிக் பின் ஸியாத் அவர்களும் உடன் இருந்தார்.
இந்தக் கோரிக்கை இஸ்லாமியப் பேரரசின் தலைமை பீடம் அமைந்திருந்த சிரியாவில் “அமீருல் மூஃமினீன் வலீத் இப்னு அப்துல் மாலிக்கிடம் வைக்கப்படுகிறது. மிகப் பொறுமையாக அனைத்தையும் கேட்ட உமையா கலீஃபா வலீத் அவர்கள். முதலில் ஸ்பெயின் மன்னன் ரோட்ரிக்ஸின் இராணுவ வலிமை அதன் உறுதிநிலை குறித்து உளவு சேகரிக்குமாறு உத்தரவிடுகிறார். உடனடியாக களத்தில் இறங்கிய வட ஆப்ரிக்கா கவர்னர் மூஸா இப்னு நுஸைர் அவர்கள் அந்தப் பொறுப்பு முழுவதையும் தனது நம்பிக்கைக்குரிய தளபதி தாரிக் பின் ஸியாத் அவர்களிடம் ஒப்படைக்கிறார்.
வீரத்தளபதி தாரிக் அவர்கள் வடஆப்ரிக்காவில் உள்ள “பெர்பர்” பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் வடஆப்ரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியின் புவியியல் சூழலை நன்கு அறிந்தவர். வடஆப்ரிக்காவில் இருந்த இஸ்லாமிய இராணுவத்தில் உளவுத் துறையின் தலைவர் தஃரிப் என்ற தளபதியை தேர்வு செய்து அவரின் கீழ் நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட, எதற்கும் அஞ்சாத 400 கமாண்டோக்களை முதல் நிலை வீரர்களாகத் தேர்வு செய்து ஸ்பெயினின் வஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸின் இராணுவ வலிமையை உளவு பார்த்திட பணிக்கப்பட்டனர்.
வட ஆப்ரிக்காவின் எல்லையோர நாடான மொரோக்கோவிற்கும் – ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட கடற்பகுதி ஜிப்ரால்டர் ஜலசந்தி என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜிப்ரால்டர் என்ற பெயர் அந்த கடற்பரப்பிற்கு ஏற்பட்ட காரணத்தை பின்னால் பார்ப்போம்.
இப்போது இந்த 400 பேர் கொண்ட இஸ்லாமிய இராணுவத்தின் உளவுப்பிரிவு கமாண்டோ படை தயாராக நிற்கிறது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் வஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸின் படைகள் ரோந்து சுற்றுவதை தெரிந்து கொண்ட இஸ்லாமிய இராணுவ உளவுப் பிரிவின் தளபதி தஃரிப் அவர்கள் தாங்கள் கடலில் செல்வதற்கு சியோட்டாவின் கவர்னர் ஜுலியனின் கப்பல்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று திட்டமிடுகின்றார். காரணம் ஸ்பெயினும் சியோட்டாவும் ரோமப் பேரரசின் கீழ் உள்ள நாடுகள். அவர்களின் கடற்படைகளில் ரோமப் பேரரசின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதால் சியோட்டாவின் கடற்படை கப்பல்களைப் பயன்படுத்தினால் ஸ்பெயின் வஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸின் படைகளால்இஸ்லாமிய உளவுப்பரிவு கமாண்டோக்களை அடையாளம் காண இயலாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ரோமப் பேரரசின் முத்திரை பதிக்கப்பட்ட ஜுலியனின் கடற்படை கப்பல்களில் இஸ்லாமிய இராணுவத்தின் உளவுப் பிரிவு கமாண்டோக்கள் 400 பேர் புறப்பட்டனர். சில மாதங்கள் ஜிப்ரால்டர் கடற்பகுதி மற்றும் ஜிப்ரால்டர் மலை அதன் சுற்றுப் பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்து வஸிகோத் மன்னனின் இராணுவ வலிமை, அவை நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் அவர்களின் உணவு, பழக்க வழக்கங்கள் அனைத்தையும் முழுவதுமாகத் தெரிந்து வந்து கவர்னர் மூஸா இப்னு நுஸைர் அவர்களிடம் அறிக்கை கொடுக்கின்றனர்.
இஸ்லாமிய உளவுப் பிரிவு கமாண்டோக்களின் உளவு அறிக்கையின் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மாலிக்கின் பார்வைக்குச் செல்கிறது. உளவு அறிக்கையின் அடிப்படையில் ஸ்பெயின் விஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸ் மீது இராணுவ நடவடிக்கை மிக நுணுக்கமாக திட்டமிடப்படுகிறது. பொறுப்பு வீரத்தளபதி தாரிக் பின் ஸியாத் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இஸ்லாமியப் பேரரசின் இராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபடுகிறது.
முழு இராணுவத்திலுமிருந்து தகுதிமிக்க வீரர்கள் ஏழாயிரம் பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். அரபு இன வீரர்களைக் காட்டிலும் வட ஆப்ரிக்காவின் “பெர்பர்” இன வீரர்களே அதிகம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். காரணம் ஸ்பெயின் என்பது ஐரோப்பிய நிலம், கடல் தாண்டிச் செல்லவேண்டும் என்பதால் அந்தப் புவியியல் சூழலுக்கும் கடல் போருக்கும் நன்றாகப் பயிற்சி பெற்றவர்கள் அந்த ஆப்ரிக்க பெர்பர் வீரர்கள்.
மேலும் அந்த பெர்பர் இன வீரர்களில் பெரும் பகுதியினர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்கள். பொதுவாகவே புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களிடம் உறுதியான நம்பிக்கையும் கொள்கையை விரிவாக்க வேண்டும் என்ற வேட்கையும் மிகுந்திருக்கும். வரலாறு முழுவதும் இந்த உளவியல் பண்புகளை காண முடிகிறது. இன்றும் கூட புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களிடம் உள்ள தெளிவான சிந்தனையும் மார்க்க பேணுதலும் பிடிப்பும் பரம்பரை முஸ்லிம்களிடம் காணமுடிவதில்லை.
அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாத்திற்காக வாழ்வை அர்ப்பணிப்பது என்ற அடிப்படைக் கொள்கைக் கட்டமைப்பைக் கொண்ட இஸ்லாமிய இராணுவம் வீரத் தளபதி தாரிக் பின் ஸியாத் தலைமையில் மொரோக்கோவின் மத்திய தரைக்கடல் எல்லையில் தயாராக அணிவகுத்து நின்றது. இந்த ஏழாயிரம் வீரர்களும் மீண்டும் சியோட்டோ கவர்னர் ஜுலியனின் கடற்படைக் கப்பலிலேயே புறப்பட்டனர்.
ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கி.பி.711 இஸ்லாமிய இராணுவம் “அல்லாஹ் அக்பர்” என்று அடிவயிற்றின் ஆழத்திலிருந்து கிளம்பிய உயிரின் உயிரான முழக்கத்தை ஓங்கி ஓங்கி ஒலித்தபடி அல்லாஹ்வுக்காக அல்லாஹ்வுடைய தீனிற்காக உயிர்த் தியாகம் செய்திட கடலில் இறங்கி கப்பலில் ஏறியது.
இஸ்லாமிய இராணுவம் 14 கடல் மைல்கள் இரவில் பயணம் செய்து மொரோக்கோவிலிருந்து கடல்தாண்டி ஸ்பெயின் எல்லையில் அமைந்திருந்த ஒரு மலைக்குன்றை அடைந்தது. அந்த மலையில் ஒரு சில நாட்கள் தங்கி புதிய நிலப்பரப்பிற்கு ஏற்ப தங்கள் போர்த்திறனை புதுப்பித்துக் கொள்கின்றனர்.
தளபதி தாரிக் தலைமையிலான இஸ்லாமிய இராணுவம் அந்தமலையில் தங்கியதால் தளபதி தாரிக்கின் பெயராலேயே அந்த மலைக்குன்று அன்று முதல் “ஜபல் அல்தாரிக்’’ என்று அழைக்கப்பட்டது. அது பிற்காலத்தில் மறுவி ஜிப்ரால்டர் என்றாகிப் போய்விட்டது. இன்னும் ஐரோப்பாவையும் ஆப்ரிக்கா, ஆசியாவையும் கடல் மார்க்கமாக இணைக்கும் அந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியில்தான் உலகின் அதிகப்படியான கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
போர்ப் பயிற்சி முடிந்து போருக்குத் தயாரான நிலையில் இஸ்லாமிய இராணுவத்தின் ஏழாயிரம் வீரர்களும் அணிவகுத்து நின்றனர். இஸ்லாமிய இராணுவம் ஸ்பெயினை அடைந்துவிட்ட செய்தி விஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸிக்கு சென்றவுடன் ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சம் வீரர்களைத் திரட்டி இஸ்லாமிய இராணுவத்தை எதிர்க்கொள்ளத் தயாராக நின்றான். விஸிகோத் மன்னனின் ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றதையும் மறுபுறம் தனக்குப் பின்னால் வெறும் ஏழாயிரம் இஸ்லாமிய இராணுவத்தினர் அணிவகுத்து நிற்பதையும் பார்த்த வீரத் தளபதி தாரிக் இப்னு ஸியாத் அவர்கள் ஒரு உத்தரவு போடுகிறார்.
மொரோக்கோவிலிருந்து தாங்கள் பயணித்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்துமாறு உத்தரவிடுகிறார். கப்பல்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. அப்போது இஸ்லாமிய இராணுவத்தின் ஏழாயிரம் வீரர்களுக்கு முன்பாக கம்பீரமாக வீரத் தளபதி தாரிக் ஆற்றிய உரை குறித்து இந்த 1400 ஆண்டு காலத்தில் வாழ்ந்த பல வரலாற்று ஆசிரியர்கள் வியந்து வியந்து புகழ்ந்து புகழ்ந்து எழுதிக் குவிக்கின்றனர்.
ஸ்பெயின் கேடிலேட் ஆற்றங்கரை ஓரத்தில் போர் துவங்கியது. ஙிணீttறீமீ ஷீயீ நிuணீபீணீறீமீtமீ என்று இதனை வரலாற்று ஆசிரியர்கள் அழைப்பர். குடிகாரர்களுக்கும் கொள்கைச் சிங்கங்களுக்கும் நடைபெற்ற போர். ஈமானியச் சிகரங்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போர். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடைபெற்ற போர்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனது பாதையில் போர் செய்யும் முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவிகள் வந்து சேரும் என்ற அல்லாஹ்வின் வாக்கு மீண்டும் நிருபணமானது. விஸிகோத் மன்னனின் படைகள் பின்னங்கால் பிடரியில்பட ஓடினர். “அல்லாஹு அக்பர்” என்ற அனல் தெறிக்கும் முழக்கம் அவர்களைச் சிதறடித்து சின்னாபின்னமாக்கியது.
இஸ்லாமிய இராணுவ வீரர்களுக்கு உதவிட வட ஆப்ரிக்காவில் இருந்து மேலும் ஐந்தாயிரம் வீரர்கள் வந்து சேர்ந்தனர். சியோட்டாவின் கவர்னர் ஜுலியன் தனது அமைச்சர்களையும் அறிஞர்களையும் ஸ்பெயினிற்கு அனுப்பி “மூர்”கள் அதாவது முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆக்கிரமிக்க வரவில்லை கொடுங்கோலன் ரோட்ரிக்ஸின் அட்டூழியத்தை அடக்கவே வந்துள்ளனர். மேலும் அவர்கள் இறைத்தூதுச் செய்தியை தாங்கி வந்துள்ளனர். அமைதியை நிலைநிறுத்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் சுதந்திரம் அளிக்கவே வந்துள்ளனர். அவர்களை நாம் வரவேற்கவேண்டும். அவர்களின் ஆட்சியில் நீதி நிலைநிறுத்தப்படும் என்று ஸ்பெயின் மக்களுக்கு விளக்கம் அளிக்கச் செய்தார். உண்மை நிலையை புரிந்து கொண்ட ஸ்பெயின் மக்கள் போரில் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளித்தனர். தங்களது படை வீரர்களையும் பின் வாங்கச் செய்தனர். போர் ஓய்ந்தது. விஸிக்கோத் மன்னன் ரோட்ரிக்ஸ் போரில் கொல்லப்பட்டான். இஸ்லாமிய இராணுவம் போரில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை நிலைநிறுத்தியது. அதனால் வெற்றி பெற்றது. மக்கள் மனமகிழ்ச்சியோடு முஸ்லிம்களை வரவேற்றனர். வீரத் தளபதி தாரிக் தனது போர்ப்படை வீரர்களோடு மண்ணில் விழுந்து அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து நன்றி தெரிவித்தார்.
போரில் முஸ்லிம்கள் தரப்பில் மூவாயிரம் வீரர்கள் ஷஹீதானார்கள். தங்கள் உயிரை இறைமா£¢க்கத்திற்காக தியாகம் செய்தார்கள். பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து என்பது ஆண்டுகளில் இஸ்லாமிய மார்க்கம் கண்டம் விட்டு கண்டம் சென்று ஐரோப்பாவின் நுழைவு வாயிலான ஸ்பெயினில் நிலைபெற்றது. அடுத்த 800 ஆண்டுகள் இஸ்லாமிக் ஸ்பெயின் அதாவது அரபியில் “அல்-அந்தலூஸிய்யா” உலகின் உன்னதமான நாடாக உருமாறியது. கி.பி. 711இல் வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்களின் ஈமானிய உறுதியும் நிலைகுலையாத வீரமும் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியை மலரச் செய்தது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்துக் கலைகளும் ஆழமாக மிக மிக நேர்த்தியாக உலகமே வியக்கும் வண்ணம் செழித்து வளர்ந்தன. மக்கள் ஆனந்தம் அடைந்தனர். அல்-அந்தலூஸிய்யா அறிவின் நுழைவிடமாக, அறிவியல் ஆய்வுகளின் பிறப்பிடமாக, உயரிய நாகரீகத்தின் தலைமை பீடமாக விளங்கியது. பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் அரண்மனைகளும் நிரம்பி இருந்தன. மத்திய கால உலக வரலாற்றின் பெரும் பங்கு இஸ்லாமிக் ஸ்பெயின் என்ற அல்-அந்தலூஸிய்யாவைச் சுற்றியே பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகள் கழிந்தன. 12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லிம்களிடம் குழுச் சண்டைகளும் கோஷ்டி மோதல்களும் அதிகரித்தன. பதவிக்காக ஒருவரை ஒருவர் தாக்கி தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டனர். சமயம் பார்த்து கிறித்துவ உலகம் ஒன்று சேர்ந்து தொடர்ச்சியாக சிலுவை யுத்தங்கள் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்து, மதமாற்றம் செய்து நாட்டைவிட்டு வெளியேற்றியது.
இறுதியாக கி.பி. 1492ல் ஸ்பெயினில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்ற நிலை உருவானது. அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு இறை இல்லம் கூட இல்லாமலும் அல்லாஹ்வின் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாமலும் முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து துடைத்து எறியப்பட்டனர்.
அல்லாஹ்வின் மார்க்கதில் பேணுதலும் பிடிப்பும் உடைய மக்களாக வாழ்ந்தவரை அவர்கள் உலகின் ஆட்சியாளர்களாக இருந்தனர். பாதை மாறி அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்தபோது அவர்கள் அனாதைகளாகக் கைவிடப்பட்டு திக்குத் திசை தெரியாமல் ஆக்கப்பட்டு இணைவைப்பவர் களால் தெருக்களில் படுகொலை செய்யப்பட்டனர். வீரத்தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்களின் தியாகம் நமக்கு ஒரு முன்மாதிரி. பிற்கால ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வு நமக்கு ஒரு படிப்பினை. மட்டுமல்ல, அது ஒரு எச்சரிக்கை.
தாரிக் இப்னு ஜியாத் உரை நிகழ்த்துகிறார்…
கி.பி. 711. ஜுலை – 13 இடம்: ஜிப்ரால்டர் மலை அருகில் – ஸ்பெயின்
உரையின் சுருக்கம்:
“அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் துணைகொண்டு ஆரம்பம் செய்கிறேன். எனதருமை வீரர்களே! உங்களுக்குப் பின்னால் கடல் இருக்கிறது. முன்புறம் நவீன ஆயுதங்களோடு அணிவகுத்து நிற்கின்றனர் எதிரிகள். அல்லாஹ்வின் மீதும் தனித்துவமிக்க உங்களின் தன்னம்பிக்கையின் மீதும் மனஉறுதிப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கிறீர்கள். எதிரிகளை வீழ்த்தி உடனடி வெற்றியைப் பெறவில்லையென்றால் உங்களது நம்பிக்கையான எதிர்காலம் பாழாகிவிடும்.
எதிரிகளின் உள்ளங்களில் பதற்றமும் பீதியும் நிறைந்துள்ளது. அவர்கள் வயிறுமுட்ட குடித்துவிட்டு நிற்கின்றர். வீரர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அதிகமதிகம் வணக்கங்களில் ஈடுபடுங்கள் அல்லாஹ்விடம் மனமுருகி துஆச் செய்யுங்கள். ஷஹீது என்ற உன்னதமான நிலையை அடைய மனதில் நிய்யத் செய்யுங்கள். இந்தப் போரில் உங்களை வழிநடத்தும் நான் உங்களில் முதல் நபராக உங்கள் எதிரிகளை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உங்களுக்கு ஏற்படும் எந்த அபாயமும் எனக்கும் சொந்தமானது. உங்களில் இருந்து எந்தச் சூழலிலும் நான் விலகிச் செல்ல மாட்டேன். இது அல்லாஹ்வின் மீது ஆணை! சத்தியத்தை நிலைநிறுத்துவதே நமது குறிக்கோள். உங்களில் யாராவது உயிருக்குப் பயந்து புறமுதுகிட்டு ஓடினால் அவர்களுக்குப் பரிசு மரண தண்டனையே! இன்ஷா அல்லாஹ், போரில் வெற்றிபெறும் நமக்கு இந்த நாட்டில் சிறப்பான பரிசுகள் காத்திருக்கின்றன.
அமீருல் முஃமினீன் கலீபா வலீது இப்னு அப்துல் மாலிக் அவர்கள் தங்களின் அரபு இன வீரர்களில் இருந்து தனித்திறன் பெற்ற உங்களை இந்தப் புனிதப்போரில் முதல்நிலை வீரர்களாக தேர்வு செய்துள்ளார். அல்லாஹ்வின் வார்த்தைகள் இந்த ஐரோப்பிய மண்ணில் ஓங்கி ஒலித்திட வேண்டும் என்பதே கலீபா அவர்களின் விருப்பம். விஸிகோத் மன்னன் ரோட்ரிக்ஸை நேருக்கு நேர் சந்திக்கும் முன்பாக நான் வீழ்ந்தால் எனது இந்த உத்தரவுகளை இரட்டிப்பாக்கி வீறுகொண்டு எழுந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த மண்ணில் நிலைநிறுத்துங்கள். ரோட்ரிக்ஸ் வீழ்ந்தால் அவனோடு அவனது வீரர்களையும் வெற்றி கொள்வீர்கள்”
என்று வீரத் தளபதி தாரிக் பின் ஜியாத் அவர்கள் உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்தி முடித்தவுடன் உரமேற்றப்பட்ட வீரர்களின் உள்ளத்திலிருந்து மீண்டும் “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” என்ற உயிரின் உயிரான முழுக்கம் விண்ணையும் மண்ணையும் அதிரச் செய்தது. அது எதிரிகளின் உள்ளங்களை நடுங்கச் செய்தது.
1300 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இதைப்படிக்கின்ற நமது உணர்வுகளையும் அது உசுப்பி விடுகின்றது. “அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகில் வேறு எதாவது இருக்கிறதா என்ன?